இதற்கமைய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மே தின கூட்டம் இன்று பிற்பகல் 2 மணியளவில் நுகேகொடை ஆனந்த சமரகோன் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினக்கூட்டம் இந்த முறை சுதந்திர சதுக்க வளாகத்தில் இடம்பெறவுள்ளது.
கடந்த 26ஆம் திகதி ஐக்கிய மக்கள் சக்தி கண்டியில் ஆரம்பித்த பேரணி இன்று நிறைவடையவுள்ளது.
குறித்த பேரணி சுதந்திர சதுக்க வளாகத்தை சென்றடையவுள்ளது.
இதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் கட்சியின் மே தினக் கூட்டம் இன்று முற்பகல் 10 மணியளவில் கொழும்பிலுள்ள பிரதான கட்சி அலுவலகத்தில் இடம்பெறவுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியின் மே தின கூட்டம் புதிய நகர மண்டப வளாகத்தில் இடம்பெறவுள்ளது.
அத்துடன் ஜே.வி.பி. இன்றைய தினம் 4 இடங்களில் மே தின கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது.
அதன் பிரதான மே தின ஊர்வலம் இன்று பிற்பகல் மாளிகாவத்தை பீ.டி.சிறிசேன விளையாட்டரங்கில் ஆரம்பமாகி பிற்பகல் 3 மணியளவில் கொழும்பு கோட்டையை வந்தடையவுள்ளது.
இது தவிர, யாழ்ப்பாணம், அநுராதபுரம் மற்றும் மாத்தறை ஆகிய இடங்களிலும் ஜே.வி.பியின் மே தின கூட்டங்கள் இடம்பெறவுள்ளன.
இதேவேளை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மே தின கூட்டம் கொட்டகலை சி.எல்.எஃப் வளாகத்தில் இடம்பெறவுள்ளது.
இதற்காக கட்சியின் தோட்ட தலைவர்கள், தலைவிகள் மற்றும் அமைப்பாளர்கள் உள்ளிட்டோர் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் மலையக மக்கள் முன்னணி என்பன அந்தந்த தோட்டங்களிலும் பிரதேசங்களிலும் மே தின நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளன.
இதேவேளை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதான மே தினக் கூட்டம் இன்று கிளிநொச்சியில் இடம்பெறவுள்ளது.
இது தவிர நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல ஆர்ப்பாட்டங்களும் இன்றைய தினம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
138 total views, 1 views today