நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் இன்றுடன் நீக்கப்பட்டதையடுத்து அத்தியாவசிய அரச சேவைகளுக்கு முன்னுரிமையளித்து, பொதுச் சேவைகள் வழமை போன்று முன்னெடுக்கப்படுமென அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொவட்-19 பரவலைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடிந்துள்ள இந்த சந்தர்ப்பத்தில், அரச சேவைகளை வழமை போன்று முன்னெடுக்க வேண்டிய அவசியம் உள்ளது.
எனவே சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய, அத்தியாவசிய அரச சேவைகளுக்கு அதிக முக்கியத்துவமளித்து, பொது சேவைகள் முன்னெடுக்கப்படுமென அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
அதேவேளை 41 நாட்களுக்குப் பின்னர் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீக்கப்பட்டாலும் கூட இன்று முதல் 15ஆம் திகதிவரை இரவு 10 மணிமுதல் அதிகாலை 4 மணிவரை பொதுமக்கள் வெளியில் அநாவசியமாகப் பயணிக்க முடியாது எனச் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்துத் தடை தொடர்ந்து அமுல்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் அத்தியாவசிய தேவைக்கருதி பொதுச் சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளபோதிலும் பொதுமக்கள் சுகாதார வழிகாட்டல்களுக்கேற்ப தமது சேவைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
324 total views, 1 views today